அன்பு நண்பர்களே

அன்பு நண்பர்களே


தங்களது நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், நுகர்வோர் குறித்த தகவல்கள், நுகர்வோர் சட்டங்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த தகவல்கள் இருந்தால் எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ஆய்வுக்கு பின் தங்கள் பெயருடன் கட்டுரை வெளியிடப்படும்.
Email id fcaindia.nlg@gmail.com

நன்றி FCA INDIA ஆசிரியர் குழு

சனி, 20 டிசம்பர், 2014

பாகும் பருப்பும் தேனும் தினை மாவும்

பாகும் பருப்பும் தேனும் தினை மாவும் -

பாகும் பருப்பும்   தேனும் தினை மாவும் -இவை
நாலும்  கலந்துனக்கு   நான்  தருவேன் . . . . . . . . "

பள்ளி செல்லும் குழந்தைகள் இறைவனை வணங்க சொல்லி கொடுக்கும் பாடல் இது. இந்த பாடலில் தேனை மேலும் மூன்று உணவு பொருட்களுடன்  சேர்த்து இறைவனுக்கு படைத்து, வழிபட்டு சங்க தமிழ் அறிவை கேட்கும் கோரிக்கை மனு.


                                  தேனை, இறைவனை வழிபட மட்டுமல்ல, இன்னல் பல தீர்க்கும் அருமருந்தாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். ஆனால், இன்று நமக்கு கிடைக்கும் தேன், நோய் தீர்க்குமா?  நோய் கொண்டு தருமா?

தேனின் மருத்துவ குணங்கள் என்னென்ன?
தேனில் கலப்படம் நடைபெறுவது எப்படி?  அந்த கலப்படத்தை கண்டு பிடிப்பது எப்படி? தேனின் மகத்துவம் குறைவதெப்படி?

                                       தேனீக்கள், மலர்களின்  



மகரந்தங்களிலிருந்து , பூந்தேனை குடித்து வந்து, தேன் அடைகளில்  தேக்கி வைத்து தித்திக்கும் தேனாய் நமக்கு தருகின்றன. தேனீக்கள் உடலில் சுரக்கும் ஒருவகை சுரப்பி நீர், பூந்தேனை நாமருந்தும் தேனாக மாற்றுவதில் பெறும் பங்கு வகிக்கின்றது.

                                              
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட  1.5 மில்லியன் டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் தேனில் 40 சதம் ஆசியாவில்தான் உற்பத்தியாகிறது. இந்தியாவைப்போல் வளரும் நாடுகளில் தனி நபர் ஒருவர் சராசரியாக 100 முதல்  200 கிராம்  தேனை உண்ணுகின்றனர்.
இது வளர்ச்சி அடைந்த நாடுகளில் சற்று அதிகம்.

                                           
தேனில் இனிப்பு சத்து அதிகம். பிருக்டோஸ், க்ளுகோஸ் அதிகமாகவும், தாது பொருட்கள் குறைவாகவும் உள்ளன. அந்ததந்த பகுதிகளில் பூக்கும் மலர்களின் தன்மையை பொருத்தே, தேனின் தன்மையும் அமையும். மற்ற ஆயுர்வேத மருந்துகளுடன் தேனை சேர்த்து உண்பதால், அந்த மருந்துகள் நம் உடம்பிலுள்ள செல் திசுக்களின் உள்ளே ஆழமாக ஊடுருவி பயன் தர தேன் உதவுகின்றது.
                                             தேனில் உள்ள ஈரபதத்தின் அடிப்படையில், தேனின் தரம் நிர்ணயம் செய்யபடுகின்றது. ஈரப்பதம் 20 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தால், அது 'ஸ்பெஷல்'  கிரேடு   தேன் எனவும், 20 முதல்   22 சதவிகிதம் ஈரப்பதம் இருந்தால், அது 'A' கிரேடு தேன் எனவும்,   22 முதல் 25 சதம் ஈரப்பதம்   இருந்தால் அது 'ஸ்டாண்டர்ட்"   கிரேடு எனவும் மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகின்றன.   
                                     நம் இந்திய தேசம், ஒரு வருடத்தில் 65,000 டன் தேனை உற்பத்தி செய்து, சுமார் 25,000  டன் வரை ஏற்றுமதி செய்கிறது.தென்  மாநிலங்களில், தேன் தயாரிப்பிலும், ஏற்றுமதி செய்வதிலும், தமிழகம் தலை சிறந்து நிற்கிறது. கேரளமும், கர்நாடகாவும் அடுத்தடுத்த இடங்களில் நிற்கின்றன. வடமாநிலங்களில், காஷ்மீரில்தான் தேன் அதிகளவில் உற்பத்தியாகிறது. காடு வளமும், நாட்டுப்புறங்களில் பயிரிடப்படும் பூஞ்செடி, காய்கறிகளும்,நம் நாட்டின் சீதோஷன நிலையும் நல்ல தேன் உற்பத்திக்கு நமக்கு துணை புரிகின்றன.
                                                தேனில் கலப்படம் என்றால், ஈரப்பதம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதும், இனிப்பு தன்மையை அதிகப்படுத்த சர்க்கரை பாகை கலப்பதும் தான்.  சர்க்கரை பாகு கலப்படத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம். நல்ல தேனை நாய் நக்காது என்பது பழமொழி. தேனை சிறிதளவு எடுத்து நாய் முன் ஊற்றினால், சுத்தமான தேனென்றால், அதனை நாய் நக்காது. சிறிதளவு சர்க்கரை பாகு கலப்படம் செய்யப்பட்டிருந்தாலும், நாய் அதனை ருசித்து உண்ணும். நாய் இல்லாத வீட்டில், நாயை தேடி ஓடவா முடியும்.
                                                   ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய  தண்ணீர் ஊற்றி, ஒரு கரண்டியில் தேனை எடுத்து, சிறிது சிறிதாக ஊற்றினால், நல்ல தேன் கம்பிபோல் நீரில் இறங்கும்.  சர்க்கரை பாகு கலப்படம் செய்யபட்டிருந்தால், அது நீரில் கரையும்.


                                              இதையெல்லாம் தூக்கி சாப்பிட, தேனில்  இப்போது ஒரு கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதான், தேனில் காணப்படும் ஆண்டிபயொடிக்ஸ்.தேனீக்களுக்கு ஏற்படும் நுண்ணுயிரி மற்றும் வைரஸ் தாக்குதல்களிலிருந்து  தப்பிக்க  டெராமைசின், சல்போனாமையிட்,டெட்ரா சைக்ளின், க்ளோரோம்பனிகால், எரித்ரோமைசின் போன்ற எதிருயிரி (Anti-biotic) மருந்துகள் அதிகளவில்,எந்தவித கட்டுபாடுகளும் இன்றி பயன்படுத்தப்படுகின்றன.



                                விளைவு, தொடர்ந்து  எதிருயிரி மருந்து கலந்த தேனை உண்பதால், தீவிர உடல் நல கோளாறுகள் ஏற்படும். இத்தகைய மருந்து படிவங்கள், ஏற்றுமதி செய்யப்படும் தேனில் இருப்பதை விட, உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனில் இருபத்தைந்து மடங்கு அதிகம் இருப்பதுதான், அண்மைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்.
                                             சரி, மருந்தின் படிவங்கள் கலந்த தேன் உண்பதால் என்ன பிரச்சனைகள் வரும் ? குறைந்த அளவில் உள்ள சில மருந்துகள், தோலில் அரிப்பு, அஜீரண கோளாறுகள்  ஏற்படுத்தும். அதுவே, அளவுக்கு அதிகமானால், அந்த கிருமிகளுக்கு எதிர்ப்பு  சக்தி கொடுத்து, மனிதன் பாதிக்கும்போது, மருந்தே இல்லை என்ற நிலை உருவாகும்.
                                             நாம் கலப்படமான தேனை குழந்தைகள் உடல் நலம்  காக்க அளித்தது  போக, அந்த தேனே குழந்தைகள் பற்களில் கரை படிய காரணமாகிவிடும்.
                                                 தேனின் தரத்தை EU, CODEX ALIMENTARIUS & FDA  போன்ற அமைப்புகள் எப்படி அயல்நாடுகளில் நிர்ணயம் செய்துள்ளதோ, அதே நடைமுறை இந்தியாவிலும் அமல்படுத்தப்படும் என்று அண்மையில் இந்தியாவின், உணவு பாதுகாப்பு மற்றும் தர  நிர்ணய அமைப்பு (FSSAI)அறிவித்துள்ளது, நம் அனைவர் நெஞ்ச்சிலும் ( தேன்) பால் வார்க்கும் செய்தியாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக